Tuesday, July 07, 2009

பிரபாகரன் - ஆங்கில நூல்

- செல்லமுத்து குப்புசாமி

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை வரலாற்று நோக்கில் நான் அணுகி எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.




இது ஏற்கனவே தமிழில் வெளியான எனது பிரபாகரன் - ஒரு வாழ்க்கை என்ற நூலின் ஆங்கிலமாக்கல் என்றாலும் கூட, தமிழ் பேசாத இந்தியாவின் பிற பகுதியினரையும், பிற தேசத்தவரையும் மனதில் வைத்து கூடுதல் தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது.

Prabhakaran - The Story of his struggle for Eelam எனும் தலைப்பில் வெளியாகும் இந்நூலை ஆன்லைன் மூலமாகவும் பெறலாம்.

உங்கள் கருத்துக்களும், விமர்சனமும் வரவேற்கப்படுகின்றன.

Monday, April 06, 2009

பணவீக்கமும், பதற்றமும்!

- செல்லமுத்து குப்புசாமி

பணம் வீங்கும் விதம் என்ற தலைப்பில் உயிரோசை இணைய வார இதழுக்கு எழுதியது.

முன்பெல்லாம் அரசியல் வட்டாரங்களிலும், அறிவு ஜீவிகள் மட்டத்திலும், மக்கள் மத்தியிலும் ஒரு விவாதம் நடக்கும். விலைவாசி உயர்வு அல்லது பணவீக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறதே என்ற கவலை அந்த விவாதங்களின் மையக் கருத்தாக இருக்கும். ஆனால் இப்போது விவாதம் வேறு திசையில் நகர்கிறது. நமக்கு விவரம் தெரிந்து இந்த மாதிரி நடந்ததில்லை.

மார்ச் 14 ஆம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 0.27 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய வாரம் 0.44 சதவீதமாக நிலவிய பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த அளவு குறைவான பணவீக்கம் நிலவியதில்லை - இது செய்தி.

பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கீழே போனாலும் போகலாம் என்று கருதப்படுகிறது. அது குறித்து பொருளாதார வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். விலைவாசியின் வீழ்ச்சி ஏற்படுத்தப் போகும் பாதகங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். எனினும் பூஜ்ஜியத்திற்குக் கீழே பணவீக்கம் சென்றாலும், அதே நிலை நீண்ட நாள் தொடராது என்று ஆறுதல் அடைகிறார்கள் - இது விவாத வியாக்கியானம்.

நமக்கெல்லாம் தெரியும், பணவீக்கம் என்பது விலைவாசி ஏற்றத்தைக் குறிக்கும் ஒரு அளவுகோல் என்பது. விலைவாசி அதிகரிக்கும் போதுதான் கவலைப்பட வேண்டும், குறைந்தால் நல்லதுதானே என்ற கேள்வி நம்மைக் குடைவது இயல்பு.

இன்னொரு குழப்பமும் கூடவே வருகிறது. விலைவாசி விகிதம் முப்பது வருடத்திற்கு முன்பிருந்த நிலைக்குச் சென்றிருக்கிறது என்கிறார்கள். ஆனால் அப்போது எட்டணாவுக்கு வாங்கிய பொருளை இப்போது நூறு ரூபாய் போட்டாலும் வாங்க முடியவில்லை. யார் காதில் பூவைச் சுற்றுகிறார்கள்? இந்தக் குழப்பம் கலந்த கோபமும் நியாயமானதே.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பணவீக்கம் என்பது விலைவாசியின் அளவுகோல் அல்ல. அது தற்போதையை விலைவாசிக்கும், இதே கால கட்டத்தில் சென்ற ஆண்டு நிலவிய விலைவாசிக்குமான ஒப்பீடு. அவ்வளவுதான். உதாரணத்திற்கு சென்ற ஆண்டு 100 ரூபாய்க்கு விற்ற பொருள் இந்த ஆண்டு 110 க்கு விற்றால் விலைவாசி ஏற்றம் - அதாவது பணவீக்கம் - பத்து சதவீதம் என்று பொருள்.

ஐந்து வருடத்திற்கு முன் 10 ரூபாய்க்கு விற்ற பொருள் சென்ற வருடம் 100 ரூபாய். இந்த வருடமும் அதே நூறு ரூபாய். அப்படியானால் இந்த ஆண்டிற்கான பணவீக்கம் 0 விழுக்காடு. அதாவது ஓராண்டு காலத்தில் விலைவாசி ஏற்றம் நிகழவில்லை. அவ்வளவுதானே ஒழிய ஐந்து வருடத்திற்கு முன் இருந்த அதே 10 ரூபாய்க்கு விலைகள் இறங்கி விட்டதாக நினைத்துக்கொள்ளக் கூடாது.

பணவீக்க விகிதம் பூஜ்ஜியத்தை நோக்கி வருகிறது என்றால் போன வருடம் என்ன விலைக்குக் கிடைத்ததோ அதே விலைக்குக் கிடைக்கிறது என்றுதான் பொருளே ஒழிய விலைவாசி குறைந்து விட்டது என்றோ அல்லது அது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய விலைக்கே திரும்பிச் சென்று விட்டது என்றோ பொருளல்ல. 30 அல்லது 34 ஆண்டுகளுக்கு முன் ஒரு தடவை இதே மாதிரி குறைவான பணவீக்கம் - அந்த வருடத்திற்கும் அதற்கு முந்தைய வருடத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாத நிலை - இருந்தது போலும்.

போன வருடம் பணவீக்கம் 13 விழுக்காடு வரையெல்லாம் ஏறியது. இப்போது அது பூஜ்ஜியத்தில் உள்ளதென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் 100 ரூபாய் போட்டு வாங்கிய பொருளை போன வருடம் போலவே இப்போதும் 113 ரூபாய் கொடுத்துத்தான் வாங்க வேண்டும். தொடர்ச்சியாக ஐந்தாறு ஆண்டுகள் விஷம் போல ஏறிய ஒரு ஆண்டு மட்டும் ஏறாமல் விட்டாலோ அல்லது சற்று குறைந்தாலோ அதனால் ஏற்படும் நிகர மாற்றம் விலைவாசி இறக்கமாக இருக்கப் போவதில்லை.

அப்படியென்றால் எதற்காக பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கிழே செல்வதைக் கண்டு வல்லுனர் சமூகம் விசனப்படுகிறது?

பணவீக்கம் என்பது வருடாந்திர விலைவாசி ஏற்றத்தின் குறியீடு. வேறு விதமாகச் சொன்னால் பணத்தின் மதிப்பு காலப் போக்கில் குறைவதன் குறியீடு. அதாவது கரன்சி நோட்டை அப்படியே வைத்திருப்பதை விட வேறு எதிலாது முதலீடு செய்யலாம் அல்லது வாங்கி அனுபவிக்கலாம் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படக் காரணமானது.

அப்படி இல்லாமல் பொருட்களில் விலை காலப் போக்கில் குறைகிறது எனக் கருதுவோம். போன வருடத்தை விட இந்த வருடம் குறைகிறது. இந்த வருடத்தை விட வரும் வருடம் இன்னும் குறையும் என்று நம்புகிறோம் என்ற பட்சத்தில், “நன்றாகக் குறைந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம். எப்படியும் குறையத்தானே போகிறது” என எல்லோரும் பணத்தைப் பூட்டி வைத்துக் கொள்வோம்.

அப்போது நாட்டில் வியாபாரம் மந்தமடையும். அதன் காரணமாக உற்பத்திகள் குறையும். தொழிலாளர்களின் தேவை குறையும். வேலை இழப்புகள் கூடும். அதனால் குடும்பங்களின் வருமானம் குறையும். அதனால் அவர்கள் செய்யும் செலவுகள் குறையும். மறுபடியும் அது பொருட்களின் தேவையைக் குறைக்கும். இப்படியே போனால் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகப் படுத்து விடும்.

வாடிக்கையாளர் தேவை அருகுவதும், அதனால் விலைகள் குறைவதும் - பணவீக்கம் பூஜ்ஜியத்திற்குக் கீழே போவதும் – நம் நாட்டில் இது வரை நாம் கேள்விப்படாத ஒன்று. ஜப்பானுக்கு அதெல்லாம் புதிதில்லை. அந்த நாட்டில் எதிர்மறையான பணவீக்கம் (deflation) பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் விஷயம்.

ஆக பொருட்களின் ஒட்டுமொத்த விலைகள் தொடர்ச்சியாகக் குறைவது உவப்பானதல்ல என்று உணர்கிறோம். அதே சமயம் விலைவாசி ஏற்றம் அபரிமிதமாக இருக்கக் கூடாது என்றும் ஏற்கிறோம். ஒரு வகையில் மிதமான விலைவாசி ஏற்றம் அவசியமானதே.

அது ஒரு பக்கம் இருக்க, இந்தியாவில் நாம் சொல்லுகிற பணவீக்கம் துல்லியமானதா என்ற சந்தேகம் தவிர்க்க முடியாமல் எழுகிறது. அரசாங்கம் வாரா வாரம் ஒரு விழுக்காட்டைச் சொல்லுகிறது. நாமும் அதை நம்புகிறோம். உண்மையான நிலைமையை பணவீக்கம் பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி விவரம் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதமின்றி எல்லோருக்கும் எழுகிறது.

சராசரி மனிதனை, அவனது தேவைகளை, வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கிற காரணிகளை சரியாக வெளிப்படுத்துவதற்கு பணவீக்க எண் தவறி விட்டதென்ற ஒரு குற்றச்சாட்டு பல காலமாக முன் வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

முதலாவதாக முன்னேறிய நாடுகளைப் போல நாம் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணை (CPI – Consumer Price Index) அடிப்படியாகக் கொண்டு பணவீக்கம் கணக்கிடுவதில்லை. நமது கணக்கீட்டுக்கு மொத்தவிலைக் குறியீட்டு எண்ணை (WPI – Wholesale Price Index) மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.

இது மிகப் பெரிய தவறு. இப்போது என்னதான் பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கி விட்டது என்று சொன்னாலும் வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணும், மக்களின் அத்தியாவசியத் தேவைக்கான அடிப்படைப் பொருட்களின் விலையும் குறையவில்லை.

“Pulses and cereals, the two most commonly consumed items, are at 9.97 per cent and 10.12 per cent, respectively. The inflation rate for sugar is at 20.97 per cent,”என்கிறது செய்தி.
நம் நாட்டில் மொத்தவிலைக் குறியீட்டு எண்ணை அளவிட 435 பொருட்களின் விலையை எடுத்துக் கொள்கிறார்கள். அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டவை பயன்பாட்டு முக்கியத்துவத்தை இழந்து விட்டன.

இன்னொரு முக்கியமான சங்கதி பணவீக்கக் கணக்கீட்டில் நாம் பொருட்களின் விலையை (அதுவும் தவறான முறையில்) மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் நமது செய்யும் செலவில் பொருட்களைப் போலவே சேவைகளும் பிரதான இடம் பெறுகின்றன.

மாறிய பொருளாதாரச் சூழலில் பொருட்களின் தேவையைக் காட்டிலும் சேவைகளின் தேவை பெருகி விட்ட சூழலில், பொருட்களின் விலையேற்றத்தைக் காட்டிலும் சேவைகளின் விலையேற்றம் பெருகிவிட்ட காலத்தில், அவை மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக விளங்கும் நிலையில் பணவீக்க எண் அதைப் பிரதிபலிப்பதில்லை.
எனக்கு முடிவெட்ட ஐம்பது ரூபாய் ஆகிறது. மூன்று ஆண்டுகளில் என் வீட்டு வாடகை இரு மடங்கு கூடியிருக்கிறது. இரண்டு பேர் நடுத்தரமான உணவகத்தில் திருப்தியாகச் சாப்பிட்டுத் திரும்பினால் 300-400 ரூபாயாவது ஆகிறது.

ஆக மொத்தத்தில், பணவீக்கம் பூஜ்ஜியத்தை நெருங்கியதாச் சொன்னாலும், இவர்கள் சொல்லுகிற பணவீக்கம் சில காலம் பூஜ்ஜியத்திற்குக் கீழே நிலவும் சூழல் வந்தாலும், அது வாடிக்கையாளர் விலைக் குறியீட்டு எண்ணைப் பிரதிபலிக்காத வரை அதற்கு அளவு கடந்த முக்கியத்துவம் கொடுத்துப் பேசிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

வெளிப்படையானதும், துல்லியமானதுமானதும், நாமெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியது மட்டுமல்லாமல் நடைமுறை வாழ்வில் கண்டு உணரக் கூடியதுமான கணக்கீட்டு முறை ஒரு நாள் உருவாகும்.

பணவீக்கம், வட்டி வீதம், பொருளாதார மற்றும் முதலீடு ஆகியவற்றுக்கான அடிப்படைத் தொடர்பு குறித்து முன்னொரு காலத்தில் எழுதிய கட்டுரையின் லிங்க்

Tuesday, December 23, 2008

சத்யம் - நிஜ முகம்

- செல்லமுத்து குப்புசாமி

உலக வங்கி சத்யம் நிறுவனத்திற்கு தடை விதித்துள்ள நிலையில் 22-டிசம்பர்-2008 தேதியிட்ட இயிரோசை இதழுக்கு எழுதிய கட்டுரையை இங்கே மறு பிரசுரம் செய்கிறேன்.

*********************
சென்ற வாரம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் ஒரு கரும் பக்கத்தை எழுதுவதற்கு முயன்று தோற்றுப் போயுள்ளது. 'சத்யம்' என்ற வட மொழிக்கு மாற்றாக வழங்கப்படும் 'உண்மை, நீதி, நேர்மை' ஆகிய சொற்களை எல்லாம் சத்யம் கம்யூட்டர்ஸ் பரிகாசம் செய்துள்ளது. பங்குதாரர்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தலைமை நிர்வாகிகள் கம்பெனியைச் சூறையாடுவதில் மூன்றாந்தர நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான சத்யம் நடந்து கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏனென்றால் வெளிப்படையான நிர்வாகம் இல்லாத இந்திய நிறுவனங்கள் போலன்றி கார்ப்பரேட் கண்ணியம் (corporate governance) அளவுகோலில் மிக உயரே நிற்பவையாகவும், முதலீட்டாளர் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவையாகவும் மென்பொருள் நிறுவனங்கள் கருதப்பட்டு வந்தன. குறிப்பாக சத்யம் நிறுவனத்தின் கார்ப்பரேட் கண்ணியம் சர்வதேச அளவில் வெகுவாகப் போற்றப்பட்டது. அதற்காக Golden Peacock Global Award விருதும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. அவ்வளவு நம்பிக்கை இருந்ததால் தானோ என்னவோ சிறு முதலீட்டாளர்களையும், நிர்வாகத்தில் நேரடி ஆதிக்கம் செலுத்தாத பெரு முதலீட்டாளர்களையும் ஏமாந்த சோனகிரி என்று சத்யம் நிர்வாகம் முடிவு செய்து விட்டது போலிருக்கிறது.

இந்தியச் சூழலில் கார்ப்பரேட் கண்ணியம் எப்போதுமே வெகு கீழே இருப்பதாகவே உணரப்பட்டு வந்துள்ளது. ஃபேமிலி பிசினஸ் நடத்தும் தொழிலதிபர்கள் கம்பெனியின் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருப்பார்கள். அதனால் முழு நிர்வாகமும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும். அவர்கள் தவிர சிறுபான்மைப் பங்குதாரர்களும் இருப்பார்கள். ஆனால் அவர்களின் பங்கு எண்ணிக்கை போதுமான அளவு இல்லாத காரணத்தால் நிர்வாகத்தில் அவர்கள் கட்டுப்பாடும், தலையீடும் இருக்காது. கம்பெனியின் தலைமை நிர்வாகியும், போர்ட் ஆஃப் டைரக்டர்கள் எனப்படும் வாரிய இயக்குனர்களும் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால் பெரும்பான்மை தொழிலதிபரின் ஆட்களே இயக்குனர்களாக இருப்பார்கள்.

நிறுவனத்தின் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இயக்குனர்களின் ஒப்புதல் தேவை. இயக்குனர்கள் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் அவர்கள் சம்மதித்தால் ஒட்டுமொத்த பங்குதாரர்களும் ஒப்புதல் கொடுப்பதாக அர்த்தம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.எல்.ஏக்களும், முதலமைச்சரும் மக்கள் நலனுக்காகச் செயல்படுவதாக நாம் நினைத்துக் கொள்வது போல, நிறுவனங்களின் இயக்குனர்களும் பங்குதாரர்களின் நலனுக்காக இயங்குவார்கள் என்று நினைக்க முடியாது. ஏனென்றால் இயக்குனர்கள் பெரும்பான்மை பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால் சிறுபான்மையினரை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. என்ன செய்வது? சிறு முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்க போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் கூட்டத்தில் யாராவது குரல் கொடுக்க வேண்டுமே! அதற்காக 'சுயேட்சை இயக்குனர்கள்' எனப்படும் independent directors வாரியத்தில் அங்கம் வகிப்பார்கள். இந்த சுயேட்சை இயக்குனர்கள் நிர்வாகம் என்ன சொன்னாலும் தலையாட்டாமல் சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் சுயேட்சையாக கருத்துக் கூறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

சட்ட திட்டங்கள் எப்படி இருந்தாலும் அவை நடைமுறைக்கு வராத வரை எவ்விதப் பயனும் தருவதில்லை. சுயேட்சை இயக்குனர்களும் அப்படித்தான். ஒரு நிறுவனத்தில் 'போர்டில்' அங்கம் வகிப்பது அவர்களுக்கு வருமானம் ஈட்டும் தொழில். ஆகையால் நிர்வாகத்தைப் பகைத்துக் கொள்ளாமல் அதில் அப்படியே நீடிப்பது முக்கியமான நோக்கமாக இருக்குமே ஒழிய சிறுபான்மை பங்குதாரர் சார்பாகக் குரல் எழுப்புவதாக இருக்காது. அண்மையில் நாம் கண்ட சத்யம் சம்பவம் இந்தக் கருத்தை மீண்டும் ஒரு தடவை நீருபித்துள்ளது.

டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய மூன்று பெரிய ஜாம்பவான்களை அடுத்து 2 பில்லியன் டாலர் ஆண்டு வருமானம் ஈட்டிய நான்காவது மிகப் பெரிய இந்திய மென்பொருள் நிறுவனம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகும். முதல் மூன்று கம்பெனிகளை விட வயதிலும் இளையது. 52 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். 66 நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது. தலைமையகம் ஹைதராபாத் நகரத்தில் அமைந்துள்ளது. சேர்மன் பெயர் ராமலிங்க ராஜு. அவரும் அவரைச் சார்ந்த புரமோட்டர்களும் சத்யம் கம்ப்யூட்டரில் 8.61 சதவீதப் பங்குகளை மட்டுமே வைத்துள்ளனர்.

சத்யம் நிறுவனம் ஏகப்பட்ட பணம் வைத்துள்ளது. பணத்திலேயே மிதக்கிறது. அந்தத் தொகையை வைத்து மற்ற நிறுவனங்களை வாங்கித் தனதாக்கும் வேலையில் ஈடுபடலாம். ராமலிங்க ராஜு அந்த வேலையை முடுக்கி விட்டார். சிட்டி பேங்க் வங்கியின் சாஃப்ட்வேர் பிரிவு Citisoft, Knowledge Dynamics மற்றும் Bridge Strategy Group முதலிய சிறு நிறுவனங்களை வாங்கியது. அவையெல்லாம் மென்பொருள் அல்லது மென்பொருள் சார்ந்த நிறுவனங்கள். இது ஒன்றும் வித்தியாசமான நடவடிக்கை அல்ல. HCL, விப்ரோ, இன்ஃபோசிஸ் என எல்லா நிறுவனங்களுமே தம்மிடமுள்ள அபரிமிதமான பணத்தைக் கொண்டு சாஃப்ட்வேர் துறையில் சிறு கம்பெனிகளை சர்வதேச அரங்கில் வாங்கிப் போட்டு தமது எல்லையை விரிவாக்கிய நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.

இந்தப் பின்னணியில் ராமலிங்க ராஜு & கோ ஒரு நூதனமான காரியத்தைச் செய்யத் துணிந்தது. சத்யம் நிறுவனம் சம்பாதித்து வைத்திருக்கும் ரூ 8,235 கோடி அவர்களது கண்ணை உறுத்தியிருக்க வேண்டும். யாருமே எதிர்பாராத வகையில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை வாங்குவதாக சத்யம் நிர்வாகம் அறிவித்தது. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ராஜு குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய மேட்டர். தாங்கள் நடத்தும் கம்பெனியை சத்யம் நிறுவனத்திற்கு விற்பதாக கணக்குக் காட்டி, சத்யம் கம்பெனியில் உள்ள ஒட்டு மொத்தப் பணத்தையும் அதற்கான விலை என்று சொல்லி தங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு ஒரு திட்டம் போட்டனர்.

மேடாஸ் புராப்பர்ட்டீஸ் ராஜு குடும்பத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம். அதை சத்யம் அப்படியே காசு கொடுத்து வாங்குமாம். பிறகு மேடாஸ் இன்ஃப்ரா என்றொரு கம்பெனி. அதுவும் அவர்களது நிறுவனமே. சென்ற ஆண்டு அதன் பங்குகளை வெளியிட்டு பப்ளிக் லிமிடேட் நிறுவனமாக உருமாற்றம் செய்திருந்தனர். வெளியிட்ட பங்குகள் போக இன்னமும் ராஜு குடும்பத்தினர் வசமிருக்கும் 31 சதவீதம் பங்குகளையும் சத்யம் வாங்கிக் கொள்ளுமாம். ராமலிங்க ராஜுவின் இரு மகன்களும் நடத்தும் இவ்விரு கம்பெனிகளையும் டேக் ஓவர் செய்வதற்கு சத்யம் எட்டாயிரம் கோடி செலவழிக்கும்.

எப்படி இருக்கிறது திட்டம்? யார் அப்பன் வீட்டுப் பணத்தை யார் வாரிக் கொடுப்பது? வெறும் எட்டு சதவீதம் பங்குகளுக்கு மட்டுமே உரிமையாளரான ராமலிங்க ராஜு சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பல இலட்சக் கணக்கான முதலீட்டாளர்களின் சம்மதமின்றி, அவர்கள் பணத்தை தனதாக்கும் முயற்சியில் ஈடுபடுவதா? அமெரிக்கா அரசு அங்கே திவாலாகும் கம்பெனிகளைக் மீட்பதற்காக bailout package அறிவிப்பது போல, ராமலிங்க ராஜு தனது மக்கள் நடத்தும் கம்பெனிகளுக்கான satyam sponcered bailout நடவடிக்கையா இது? துரோகம், சதி, ஊழல் என்று முதலீட்டாளர் சமுதாயம் கதறியது.

குடும்ப பிசினஸை சத்யம் நிறுவனத்திற்கு டிரான்ஸ்ஃபர் செய்யும் காரியத்தை போர்ட் ஆஃப் டைரக்டர்கள் யாருமே எதிர்க்கவில்லை என்பதே முதலீட்டாளர் சமுதாயத்தின் கோபத்திற்கு முதன்மையான காரணம். அவர்கள் மேடாஸ் டேக்ஓவர் நடவடிக்கைக்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர். அந்த முடிவு எடுக்கப்பட்ட கூட்டத்தில் ஏழு இயக்குனர்கள் நேரில் கலந்து கொண்டனர். மற்ற இருவரும் போன் மூலம் பங்கெடுத்துப் பேசினர். சுயேட்சை இயக்குனர்களின் நேர்மையும் அந்தக் கூட்டத்தில் பல் இளித்தது. அவர்கள் "யெஸ்" என்றுதான் சொன்னார்கள்.

முதலீட்டாளர் சமுதாயம், ஊடகங்கள் என எல்லாமே பொங்கி எழுந்தன. சிறு முதலீட்டாளர்களுக்கு தொழிலதிபர்கள் நாமம் போடுவது நம் நாட்டில் வழக்கமாக நடப்பது தான். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத மீடியாக்கள் இப்போது பரபரப்பு உண்டாக்கக் காரணமும் உண்டு. சத்யம் நிறுவனத்தின் 58 சதவீதம் பங்குகள் வெளிநாட்டினர் வசம். மேலும் பல பெரிய முதலீட்டு நிறுவனங்களும் கணிசமான ஷேர் வைத்துள்ளன. அவர்கள் விழித்துக் கொண்டு கேள்வி கேட்கும் போது மீடியா கவனிக்காமல் போகுமா!

ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்டு, SBI மியூச்சுவல் ஃபண்டு, டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்டு முதலிய பரஸ்பர நிதிகளும் இன்சூரன்ஸ் கம்பெனிகளும் சத்யத்தில் வெகுவாக முதலீடு செய்துள்ளன. அரசாங்கம் தலையிட்டு நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு தடை போட வேண்டுமென்று அழுத்தம் கொடுத்தன. அந்த அழுத்தத்தை விட முதலீட்டாளர்கள் கொடுத்த அழுத்தமும் நிர்வாகத்தை கதி கலங்கச் செய்தது.

நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் CLSA ரேட்டிங் ஏஜென்சி இந்திய கார்ப்பரேட் கண்ணிய வரலாற்றில் மிக மோசமான செய்கையாக இதை வர்ணித்தது. எந்த அடிப்படையில் மேடாஸ் பங்குகளை வாங்குவதற்குத் தீர்மானித்தார்கள் என்றும், எந்த அடிப்படையில் அதற்கு விலை நிர்ணயம் செய்தனர் என்றும் தெளிவாக விளக்கவில்லை. ஒரு வேளை ரியல் எஸ்டேட் துறையில் நுழைய விரும்பினால் மிக மலிவாகக் கிடைக்கும் யூனிடெக் போன்ற ஒரு கம்பெனியை டார்கெட் செய்திருக்கலாம்.

மேடாஸ் கம்பெனிகளை சத்யம் வாங்குவதாக உலகுக்கு அறிவித்த மறுநாள் ஷேர் மார்க்கெட் சத்யம் பங்குகளை சாத்து சாத்தென்று சாத்தியது. நாஸ்டாக் அமெரிக்கப் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் அதன் ADR பங்குகள் ஒரே நாளில் 55 சதவீதம் வீழ்ந்தன. மும்பை பங்குச் சந்தையில் 30 சதவீதம் சரிவு. பல்லாயிரம் கோடிகள் ஒரே நாளில் காலி. மேடாஸ் பங்குகளும் கீழே இறங்கின. ராஜு குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ 597 கோடி குறைந்தது.

ராமலிங்க ராஜுவும், சத்யம் உயர் மட்ட நிர்வாகத்தினரும் கலங்கிப் போனார்கள். இவ்வளவு எதிர்ப்பை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று ராஜு பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். "There will be no diversification or acquisition for now" என அந்தக் கம்பெனியின் CFO சீனிவாஸ் வட்லமணி அறிவித்தார். டேக்ஓவர் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவிப்பு வெளியான மறு நாள் சத்யம் ஷேர் சற்று மேம்பட்டது.

ராமலிங்க ராஜுவின் நிலையை, "அவர் அப்செட் ஆக இருக்கிறார்" என்று சீனிவாஸ் கூறினார்.

புரமோட்டர்களும், தலைமை நிர்வாகிகளும் முதலீட்டாளர்களின் நலனுக்கு எதிராக தாங்கள் நினைத்தபடி ஆட முடியாது என்பது இந்தியாவில் முதன் முறையாக அழுத்தம் திருத்தமாகப் பதிவாகியுள்ளது. ஆனால் இது போதாது. கார்ப்பரேட் கண்ணியத்தில் நாம் கடக்க வேண்டிய பாதை இன்னும் பாக்கியிருக்கிறது.

பின் குறிப்பு: பங்குச் சந்தை உச்சத்தில் இருந்த சமயத்தில் சத்யம் நிறுவனம் ரியல் எஸ்டேட் கம்பெனியை வாங்குவதாக அறிவித்திருந்தால் அதன் பங்குதாரர்கள் குதூகலமாக வரவேற்றிருப்பார்கள். இப்படியெல்லாம் ஒரேயடியாகக் குதித்து ராமலிங்க ராஜுவை மிரட்டியிருக்க மாட்டார்கள்.

Sunday, November 23, 2008

உயிரோசை கட்டுரைகள்

உயிரோசை இணைய வார இதழில் எழுதி வரும் கட்டுரைகளின் சுட்டிகள் கீழே.

- செல்லமுத்து குப்புசாமி

26. கம்யூனிஸ்டுகளின் தேவைஎன்ற தலைப்பில் 1-ஜூன்-2009 உயிரோசைக்கு எழுதியது
25. வெற்றி என்பது என்ன? என்ற தலைப்பில் 18-மே-2009 உயிரோசைக்கு எழுதியது
24. ஜெயலலிதாவின் ஈழத்து இடி முழக்கம் என்ற தலைப்பில் 27-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது.
23. இந்தியப் பொருளாதாரத்தின் இருண்ட பக்கங்கள் என்ற தலைப்பில் 13-ஏப்ரல்-2009 உயிரோசைக்கு எழுதியது.
22. கறுப்புப் பணம்: ரஜினியும் அத்வானியும்
21. பணம் வீங்கும் விதம்
20. நிலையின்மையின் அமைதியின்மை - ஐ.டி.ஊழியர்களின் நடப்பு நிலை
19. வறுமையின் வரையறை
18. பெருந்தீனி
17. வீடும் வாழ்வும்
16. முத்துக்குமரனின் மரணம் : இன்னும் அணையாத தணல்
15. தொடரும் சத்ய சோதனை
14. பெட்ரோல் அரசியல்
13. சத்யமேவ ஜெயதே!
12. சத்தியத்தின் சரித்திரம்
11. புலமையும் வறுமையும்
10. "எங்களுக்கு வருடம் ஒரு டாலர் சம்பளம் போதும்"
9. பாகப் பிரிவினையும் பங்காளிகளும்
8. பெண்!
7. என்னவாகப் போகிறது மென்பொருள் வல்லுனர் சமூகம்?
6. கனவு இல்லம்: கலைந்த கனவு
5. சரியும் பொருளாதாரம், சாவின் அழைப்பு
4. தங்கம் எதற்காக
3. வட்டி எனும் பூதம்
2. அணு ஒப்பந்தம் தொடரும் விவாதம்
1. திவாலாகும் அமெரிக்க நிதி நிறுவனங்கள்

Wednesday, September 17, 2008

லீமென் பிரதர்ஸ் திவால்!

லீமென் பிரதர்ஸ் நிறுவனம் திவால் ஆனதை ஒட்டி உலகப் பொருளாதாரச் சந்தையில் நிலவும் சூழல் குறித்த ஆங்கிலப் பதிவு இங்கே.

Wednesday, July 11, 2007

வாரன் பஃபட் - நூல் அறிமுகம்!

- செல்லமுத்து குப்புசாமி

எனது இரண்டாவது புத்தகம் வெளிவந்திருக்கிறது.




ஆன்லைனில் ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.


பெரியார் வேடத்தில் நடித்ததை தனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு என்று நடிகர் சத்யராஜ் கூறினார். அதை விட அதிகமான மகிழ்ச்சி எனக்கு வாரன் பஃபட் வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது ஏற்பட்டது. அதற்கு மேல் விவரித்துச் சொல்லி தமிழை வாரி இறைக்க விரும்பவில்லை.

இந்த நூல் குறித்த விரிவான பதிவு இங்கே...

Wednesday, May 09, 2007

இழக்காதே புத்தகம் வெளியீடு



ஆன்லைனில் ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

விரிவான விவரம் 'கரையோரம்' தளத்தில் காணலாம்.

இழக்காதே பற்றிய வா.மணிகண்டனின் நூல் திறனாய்வை 'பேசலாம்' வலைத் தளத்தில் காண இங்கே கிளிக் செய்க.

உதயகுமாரின் நூல் அறிமுகம்/விமர்சனம் அவரது சவுண்ட் பார்ட்டி வலைத் தளத்தில்